Wednesday, December 29, 2010

கலாம் தலைவரா?

நான் ஏன் இப்படி இருக்கின்றேன் என்று தெரியவில்லை. எனக்கும் கலாமுக்கும் என்ன வாய்க்கால் தகராறா இல்லை வரப்பு தகராறா பிறகு ஏன் இப்படி எழுதுகிறேன். இதை எழுதக்கூடாது என்றே நினைத்திருந்தேன். ஆனால் அதிஷா அண்ணனின் ஸ்டேடஸ் பார்த்ததும் எழுதினால் என்ன என்று தோன்றியது. அதில் ஒருவருடைய கமென்டை பார்த்ததும் எழுதுடா பரிதி என்று வீறு கொண்டு எழுதிக்கொண்டு இருக்கிறேன்.

ஏற்கனவே கலாம் பற்றி ஒரு பெரும் விவாதம் நடந்தது. 250 கமென்ட்களை தாண்டி போய்க் கொண்டிருந்தது விவாதம்.சரி மேட்டருக்கு வருகிறேன். இந்த வார விகடனில் கலாமை சில தோழர்கள் சந்தித்துள்ளார்கள். அனைவருமே ஏதாவது ஒரு மாற்றத்தைக் கொண்டுவரவேண்டும் என விரும்பும் இளைஞர்கள். அவர்களுடனான உரையாடலின் போது ஒரு மாணவர் சொல்கிறார். நம் நாடு ராணுவத்துக்கு அதிகமாக செலவிடுகிறது. அதில் பாதியை மற்ற துறைக்கு திருப்பி விடலாம் என்கிறார். உடனே கலாம் நோ நோ 10 % குறைவான பணம் தான் நாம் பயன்படுத்துகிறோம் என்று சொல்கிறார். நான் 5 வருடங்களுக்கு முன் ஜவகர் எழுதிய கம்யூனிஸம் நேற்று இன்று நாளை புத்தகத்தைப் படித்தேன் அதில் அமெரிக்கா, பிரான்ஸ், சீனா, இங்கிலாந்து இந்தியா போன்ற நாடுகளில் இருந்து ராணுவத்திற்கு செலவிடும் பணத்தில் 20% க்கும் குறைவான பணம் இருந்தாலே பசி என்பதை உலகத்தில் இருந்து நீக்கிவிடலாம் என்று படித்த நினைவு.அவர் அந்த நூலை 2000ல் எழுதினார் என்று நினைக்கிறேன்.அப்போதே அவ்வளவு செலவு செய்தோம் என்றால் இப்போது கண்டிப்பாக அதை விட அதிகமாக செலவிடுவோம் என்றே தோன்றுகிறது. சரியாக யோசிப்பவர்களையும் கலாம் மாற்றிவிடுகிறார்.

இன்னொருவர் 26 % இந்தியர்கள் பட்டினியாய் இருக்கிறார்கள் மறுபக்கம் உணவு தானியங்களை அரசு வீணடித்துக் கொண்டிருக்கிறது என்பதைப் பற்றி கேட்கிறார்.

அனைத்தையும் இலவசமாக கொடுத்தால் மக்களுக்கு அதன் மகத்துவம் தெரியாது என்கிறார். மேலும் சீரான வழங்குதல் முறையை பின்பற்ற வேண்டும் என்கிறார். அது என்ன சீரான வழங்குதல் என்பதை சொல்ல வில்லை. எனக்கு என்னவோ மக்களுக்கு உணவின் மகத்துவத்தை சொல்லிக் கொடுப்பதை விட உணவு கொடுப்பது தான் சிறந்ததாகத் தோன்றுகிறது. உயிர் வாழ்வது என்பது உணவின் மகத்துவத்தை விட முக்கியம் என்று கருதுகிறேன். பசித்தவனுக்கு முதலில் மீன் கொடு அப்போது தான் மீன் பிடிக்க கற்றுக்கொள்வதர்கான தெம்பு இருக்கும் என்பது என் கருத்து.

கலாமிடம் ஒரு பெரும் இளைஞர் சக்தி உண்டு. அதை சரியாக பயன்படுத்தலாம் என்ற நோக்கில் நீங்கள் கட்சி ஆரம்பிக்கலாமே என்கிறார் ஒருவர். நான் ஏற்கனவே ஆரம்பிச்சுட்டேனே மாணவர் கட்சி என்கிறார். இதுக்கு ரஜினியே தேவலாம் போல. இந்த மாதிரி பேச்சுக்கள் எல்லாம் கைதட்டு வாங்குவதற்காக பேசுவது. அவர் சீரியஸாக அப்படி சொல்கிறார் என்றால் அதை வைத்து இது வரை என்ன செய்திருகிறார் என்று தெரியவில்லை.

கடைசியாக ஒன்று. ஸ்பெக்ட்ரம் கருப்புப் பணம் போன்றவை இருந்தால் எப்படி நாம் உருப்படமுடியும் என்று ஒருவர் கேட்கிறார். அதற்கு அவர் சொல்லும் பதில் உங்களால் தான் ஊழலை ஒழிக்கமுடியும் என்கிறார். அவர் சொல்லுவது சரிதான் இளைஞர்கள் வேலைக்கு போகும் போது லஞ்சம் வாங்காமல் இருந்தால் ஒழியும். ஆனால் அவர்களால் ஸ்பெக்ட்ரம் பிரச்சனையில் என்ன பண்ண முடியும். நாடாளுமன்ற கூட்டுக் குழுவை கூட்ட சொல்லி பெரும் தேசியக்கட்சிகள் கத்தியும் ஒன்றும் முடியவில்லை. 10வது 12 வது படிக்கும் சிறுவர்களைப் பார்த்து உங்களால் முடியும் என்கிறார். பிறகு 1 வது ரைம்ஸ் போல் ஒன்றை சொல்லி திருப்ப சொல்ல சொல்கிறார்.

கலாம் ஒரு பச்சையான முதலாளித்துவவாதி.அவரால் மாற்றம் வரும் என்று நினைப்பவர்கள் பெரிய முட்டாள்கள் என்பது என் கருத்து. என்னை பொருத்தவரையில் எல்லா தலைவர்களும் மக்கள் எழுந்து நடக்கவே கூடாது என்று நினைக்கிறார்கள். இவர் நடக்கலாம் ஆனால் ஒரே இடத்தில் என்கிறார். அதற்காக இவரை தலைவராய் ஏற்றுக் கொள்ள முடியாது. எனக்கு சந்தேகம் 2020ல் வல்லரசு என பேசுவதை வைத்து இவர் மக்களை மட்டும் ஏமாற்றுகிறாரா? இல்லை இவரும் ஏமாறுகிறாரா என்பது தான்.

நண்பேன்டா....

No comments:

Post a Comment